நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. மத்திய அரசு சார்பாக பிரதமர் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 வருடங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையானது ரூ.1000ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிப்பால், அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர்கான விலை அதிகரித்து வருவதால் ஏழை எளிய மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டுவரவுள்ளது. அதாவது ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய், சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை மலிவான விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பல கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா இரண்டாம் அலையின் போது மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. உதவித் தொகையும் வழங்கப்பட்டது. மேலும் தற்போது நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நடைமுறையில் உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை டீலர்கள் சிலிண்டர் விநியோகம் குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை பரிசீலினை செய்த மத்திய அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகளில் 5 கிலோ எடை கொண்ட சிறிய ரக கேஸ் சிலிண்டர் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த சமையல் எரிவாயு சிலிண்டர் மலிவான விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த கேஸ் சிலிண்டரை விற்பனை செய்ய விருப்பமுள்ள மாநில அரசுகளுக்கு தேவையான உதவி செய்யப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. தமிழகத்திலும் இந்த திட்டம் அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே குறைந்த விலையில் ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர் விற்பனைக்கு வரவுள்ளதால் குடும்ப அட்டைதாரர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.