தமிழகம் முழுவதும் பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெரும் வகையில் அத்தியாவசிய பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். ஆண்டு தோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் பல சலுகைகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு அளித்து வருகிறது.
இந்த நிலையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் குடும்ப தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் வந்து தங்களது கைவிரல் ரேகை பதிவு செய்து பொருள்களை பெற்று கொள்ளும் வகையில் பயோமெட்ரிக் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் சில நேரங்களில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக வயதானவர்களின் கைரேகை சரியாக பதிவு ஆவதில்லை. சில நேரங்களில் தொழில் நுட்ப கோளாறு காரணமாகவும் கைரேகை பதிவாவதில் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக பொருள்கள் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் கைரேகை பதிவை புதுப்பித்து வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் அலைக்கழிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. கைரேகை பதிவு இல்லாமல் பொருள்கள் வழங்க கூடாது என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் பலருக்கும் பதிவாவதில்லை என அதிகாரிகளிடம் கூறினாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை என ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு தொடர் 5 நாட்கள் விடுமுறை
இதன் காரணமாக குடும்ப அட்டைதார்களுக்கு அத்தியாவசிய பொருள்களை தடையின்றி வழங்க அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் போது விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகை பதிவு செய்வதில் தொழில் நுட்ப கோளாறுகள் ஏற்படுவதால் ரேஷன் கடைகளில் செயல்பாடுகள் குறைந்துள்ளது. கியூஆர் கோடு அங்கீகரிக்கப்படாத நேர்வுகளில் விற்பனை முனைய இயந்திரத்தில் குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்து, உரிய பதிவேட்டில் ஒப்புதலைப் பெற வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை தடையின்றி உடனடியாக வழங்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.