தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டு தோறும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் கூடிய ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகைக்கு 20 பொருள்கள் அடங்கிய மளிகை பொருள்களும் மற்றும் ஒரு முழு கரும்பும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தமிழ்நாடு தலைமை செயலகத்தில் 4ம் தேதி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொங்கல் தொகுப்பு டோக்கன் முறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் தொகுப்பை பெற ரேஷன் கடைகளில் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்று செல்கின்றனர். இதன் காரணமாக மாதம் தோறும் வழங்கப்படும் அத்தியாவசிய பொருள்களான அரசி, பருப்பு, சீனி, சமையல் எண்ணெய் போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டன. பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு இதுவரை 65% பேருக்கு வழங்கப்பட்டுள்ளதால் நாளை முதல் வழக்கம் போல அத்தியாவசிய பொருள்களோடு பொங்கல் பரிசு தொகுப்பையும் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைப்பதுடன் அத்தியாவசிய பொருள்களையும் மக்கள் பொங்கலுக்கு முன் பெற்றுக்கொள்ளலாம் என்பதால் குடும்ப அட்டைதாரர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொங்கல் தொகுப்பை ஜனவரி 31ம் தேதி வரை ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் கூடிய ரொக்கப்பணம் ரூ.2500 வழங்கப்பட்டது. அதே போல இந்த ஆண்டும் ரொக்கப்பணம் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தமிழக அரசு கடைசி வரை ரொக்கப்பணம் வழங்குவது குறித்து அறிவிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.