தமிழகத்தில் ஓமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் ஓமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் சில மாவட்டங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் ஏற்னகவே வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவைகள், வணிக வளாகங்கள், கேளிக்கைகள், திரையரங்குகள், டாஸ்மாக், காய் கறிக்கடைகள், இறைச்சி கடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதாவது மருத்துவம், ஹோட்டல்களில் பார்சல் சேவைகள், அவசர தேவைக்காக வெளியூர் செல்பவர்கள் வாடகை வாகனங்களை பயன்படுத்தி கொள்ளலாம். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு திருமண பத்திரிகை காண்பித்து செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசு ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் விதித்தும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அரசு கூறியிருந்த நிலையில், இந்த மாத இறுதிக்குள் கொரோனா பரவல் கட்டுக்குள் வராவிட்டால் பிப்ரவரி மாதம் முதல் தமிழகத்தில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது போக்குவரத்திற்கு தடை, கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு, வணிக நிறுவனங்கள் செயல்படும் நேரம் குறைப்பு, மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, டாஸ்மாக் கடைகள் மூடல், இ பாஸ் நடைமுறை போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்னும் சில தினங்களில் அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.