உலக நாடுகளில் 60ம் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தொற்று பாதித்த நாடுகளிலிருந்து இந்தியா திரும்பிய சுமார் 20ம் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடகா, டெல்லி, குஜராத், மஹாராஷ்ரா, ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் படி அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் நோய் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் வாரம் வாரம் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், வேலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதால் கவனமுடன் இருக்குமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசி போடாதவர்களை பொது இடங்களில் நடமாட தடை விதித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் ரேஷன்கடை, தியேட்டர்கள், சூப்பர் மார்க்கெட், திருமண மண்டபம், அரசு அலுவலகங்கள், ஹோட்டல்கள், வங்கிகள் உள்பட அனைத்து பொது இடங்களுக்கும் செல்ல தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் அனைத்து நிர்வாகத்தினரும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதி என்று தெரிவித்துள்ளனர். இதனால் தடுப்பூசி போட்டவர்கள் அதற்கான சான்றிதழ்களை கையில் எடுத்து கொண்டு பொது இடங்களுக்கு செல்கின்றனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள், மார்க்கெட், ஆகிய பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கை பின்பற்றபடுகிறதா என்பதை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை பின்பற்றாத நிர்வாகத்திற்கும், பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தால் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.