தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பவரலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக மழையின் அளவு குறைத்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி கொண்டிருந்த நிலையில் மீண்டும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் காரணமாக ஆந்திரா, ஒரிசா, உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்யும் என்றும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலை அதை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் உள்மாவட்டங்களிலும், வட கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடல் பகுதி, ஒரிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரி விடுமுறை
தமிழகத்தில் கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வந்தனர். கடந்த 3 நாட்களாக மழையின் அளவு குறைந்ததால் பள்ளி, கல்லூரிகள் தடையின்றி தொடங்கியது. இந்த நிலையில் மீண்டும் டிசம்பர் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீண்டும் பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.